கூடங்குளம் பாதுகாப்பு: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
கூடங்கூளம் அணு மின் நிலையம் செயல்பட தடை கோரும் வழக்கில், மத்திய 
மற்றும் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு இன்று 
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய 
அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 
அப்போது, கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் 
பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்ட 15 அம்ச பாதுகாப்பு விதிமுறைகள் 
செயல்படுத்தப்படவில்லை என்பதால், அணு மின் நிலையம் செயல்பட தடை விதிக்க வேண்டும் 
என்று மனுதாரர் சுந்தர்ராஜன் தரப்பில் வாதிடப்பட்டது. 
இதையடுத்து, இந்தப் புதிய மனு தொடர்பாக பதில் அளிக்கும்படி தமிழக 
அரசு, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
அணுசக்தி, சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளும் இதுகுறித்து விளக்கம் 
அளிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் 
செய்யப்பட்ட மனுவை, ஜனவரியில் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. 
இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ள 
பாதுகாப்பு அம்சங்களை மேற்கோள்காட்டி, இப்போது புதிய மனு தாக்கல் 
செய்யப்பட்டுள்ளது. 
 
No comments:
Post a Comment