Tuesday 22 October 2013

ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற லாலு தகுதி நீக்கம்.


கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற லாலுபிரசாத் யாதவ் எம்.பி. பதவி வகிப்பதில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகள், உடனடியாக தங்களின் பதவியை இழப்பார்கள் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி லாலுபிரசாத் யாதவ் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நேற்று, குற்ற வழக்கில் தண்டனை பெற்ற காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. ரஷீத் மசூத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி எம்.பி. பதவி இழந்த முதல் அரசியல்வாதி ஆனார்.
இதன் தொடர்ச்சியாக, கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி.க்களான லாலு பிரசாத் யாதவ், ஜகதீஷ் ஷர்மா ஆகியோர் இன்று தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அவசரச் சட்டம்
வழக்குகளில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தண்டனை பெற்றாலும், அவர்கள் உயர் நீதிமன்றங்களில் மேல் முறையீடு செய்த பின், தங்களின் பதவியில் தொடரலாம் என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
இந்த ஷரத்தை நீக்க உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 10-ம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகள், உடனடியாக தங்களின் பதவியை இழப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த அவசரச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில், அவசரச் சட்டம் ஒன்றுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த விவகாரத்தில் தலையிட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அந்த அவசரச் சட்டத்தைக் கிழித்து எறிய வேண்டும் என்று வெகுண்டெழுந்தார். அதன் தொடர்ச்சியாக, அந்த அவசரச் சட்டம் திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment