Tuesday 22 October 2013

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியது.


கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் யூனிட்டில் மின் உற்பத்தி தொடங்கியது.
இன்று அதிகாலை 2.45 மணிக்கு மின் உற்பத்தி தொடங்கியதாகவும், முதல்கட்டமாக 75 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றும் கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் சுந்தர் தெரிவித்துள்ளார். மேலும், மின் உற்பத்தி படிப்படியாக உயர்த்தப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மாஸ்கோவில் நடைபெறும் இந்திய - ரஷ்ய 14-வது உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விடுத்த அழைப்பை ஏற்று மன்மோகன் சிங் மாஸ்கோ சென்றுள்ள நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா, ரஷ்யா கூட்டு முயற்சியில், கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதலில் 2011ம் ஆண்டு இறுதியில் கூடங்குளத்தில் மின் உற்பத்தியை தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அணுமின் நிலையத்தின் ஆயத்தப் பணிகள் தாமதமானதை அடுத்து மின் உற்பத்தியை துவக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
கூடங்குளமும் இடிந்தகரை போராட்டமும்:
இதற்கிடையில், கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்தகரை கடலோர கிராம மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அணு உலை எதிர்ப்புப் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமர் தலைமையில் போராட்டங்கள் வலுத்தன. அணு உலை பாதுகாப்பானது அல்ல, கொதி நீர் கடலில் சேர்வதால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும், பேரிடர் காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து போராட்டங்கள் நடை பெற்றன. இதனால், அணு மின் நிலைய பணிகள் மேலும் தாமதமானது.
இதனைத் தொடர்ந்து அணுமின் நிலைய பாதுகாப்பு தொடர்பாக நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு கூடங்குளத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இதன் பின்னர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் கூடங்குளத்தில் பணிகள் தொடங்கின.
மின் உற்பத்தி இப்போது தொடங்கும், அப்போது தொடங்கும் என பல்வேறு நேரங்களில் கூறப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை 2.45 மணியளவில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.
உதயகுமார் கருத்து:
கூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடங்கியது குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அணு உலை எதிர்ப்புப் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமர் : இதற்கு முன்னர் பல முறை இதே போல் அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் அப்போது எல்லாம் உண்மையில், மின் உற்பத்தி தொடங்கவில்லை. இன்று மின் உற்பத்தி தொடங்கி இருப்பதாக கூறப்படுவதும் எவ்வளவு தூரம் உண்மையானது என்பது தெரியவில்லை. மேலும், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்னும் அணு மின் நிலைய பணிகள் முழுமையாக முடிந்து விட்டதாக தெரிவிக்கப்படவில்லை என தகவல். 

No comments:

Post a Comment