Saturday 28 October 2017




Com C.K.Mathivanan's Jaya Plus TV Interview: CLICK


 சென்னை தொலைபேசி மாநிலச் செயலர். தோழர்.C.K. மதிவாணன் 
அகில இந்திய பொதுச் செயலர்
தோழர். C.சந்தேஷ்வர்சிங்கிற்கு எழுதிய பகிங்கர மடல்.



தோழர். C. சந்தேஷ்வர்சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

விஜயவாடா நகரில் சமீபத்தில் நடைபெற்ற நமது தேசிய செயற்குழு கூட்டத்தில் 13.10.2017 அன்று மாலை கூட்டம் முடியும் நேரத்தில் சில தவிர்க்க முடியாத காரணத்தால் என்னால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை.  
ஆனால் 12.10.2017 அன்று என் உரையின் போது நான் எழுப்பிய அமைப்பு ரீதியான மற்றும் ஊழியர்களின் நலன் சார்ந்த கேள்விகள், விமர்சனங்கள் ஆகியவற்றிற்கு தாங்கள் ஒரு பதிலும் சொல்லவில்லை என்று பின்னர் அறிந்தேன். என்னை தனிப்பட்ட முறையில் தவறாக பேசுவதற்கும் என் மீது தவறான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவதற்கும் நான் அவையில் இல்லாத சூழலை நீங்கள் அத்தருணத்தில்  பயன்படுத்திக் கொண்டதாக தெரிகிறது. இருப்பினும், நான் எழுப்பிய கேள்விகள் ஒவ்வொன்றிற்கும் முறையான பதிலை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.  குறைந்தபட்சம் இப்பொழுதாவது என் கேள்விகளுக்கு பதில் தாருங்கள்.

1) சமீபத்தில் வர இருக்கிற நமது தொழிற்சங்கத்தின் அகில இந்திய மாநாடு நடத்துவது பற்றி நமது சங்கத்தின் எந்த முறைப்படியான அமைப்பில் முடிவு செய்தீர்கள் ? கடைசியாக கோழிக்கோட்டில் நடைபெற்ற அகில இந்திய செயற்குழு கூட்டத்தில் அகில இந்திய மாநாடு நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அகில இந்திய மாநாடு நடத்துவது பற்றிய முடிவை தேசிய செயற்குழு கூட்டத்தில் எடுப்பதை தவிர்த்துவிட்டு பஞ்சாப் மாநில செயற்குழு கூடி அதற்கான முடிவெடுப்பது  சரியா ? அது நமது சங்கத்தின் அமைப்பு விதிகளுக்கு உகந்ததா ?

2) BSNL நிறுவனத்தின்  3000 வாடிக்கையாளர்கள் சேவை மையங்களையும் மற்றும் தொலைபேசி பழுது குறித்த பதிவு செய்யும் பணி, பழுது களையும் பணி போன்றவற்றை தனியார்க்கு தாரைவார்க்க ஜூன் 2017ல் நிர்வாகம் ஒப்பந்தம் கோரியபோதும் கடந்த பல மாதங்களாக தாங்கள் வாய்மூடி மெளனியாக இருந்தது ஏன் ? 
மேலும் நிர்வாகத்தின் இந்த தொழிலாளர் விரோத முடிவை எதிர்ப்பதற்கோ  தடுத்து நிறுதுவதற்கோ  போராட துணியாதது ஏன் ?

3) சென்னை தொலைபேசி மாநில சங்கத்தை கலந்தாலோசிக்காமலும் ஒரு தகவல் கூட தராமலும்  50 டெலிகாம் மெக்கானிக் பதவிகளை சென்னை தொலைபேசி மாநிலத்திலிருந்து STR பகுதிக்கு மாற்றித்தரும்படி நிர்வாகத்திற்கு தாங்கள் தன்னிச்சையாக கடிதம் எழுதியது ஏன்?  பலமுறை பதவி உயர்வு வாய்ப்புகள் அளிக்கப்பட்டும் அதை ஏற்க மறுத்த STR  தோழர்கள்,  பயிற்சி பெற்று 14 ஆண்டுகள் ஆகியும் டெலிகாம் டெக்னிசியன் பதவி உயர்விற்கு வாய்ப்பில்லாமல் காத்துக் கிடப்பதாக பொய்யான தகவலை நிர்வாகத்திற்கு  உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டு எழுதியதன் உள் நோக்கம் என்ன ?

குறைந்தபட்சம் இப்பொழுதாவது உங்களின் சரியான பதிலை எதிர்பார்க்கிறேன்.

NFTCL பற்றிய உங்கள் குற்றச்சாட்டுகளுக்கு என் கீழ்கண்ட விளக்கம் உண்மையை வெளிப்படுத்தும் என நம்புகிறேன்.   பொய்யான பிரச்சாரத்தை நீங்கள்மேலும் தொடராமல் இருக்க இந்த விளக்கம் உதவி செய்யும் என்றும் நம்புகிறேன்.

 1) NFTCL : ஒப்பந்த தொழிலாளர்களுக்கான இந்த அமைப்பு 2013ல் அகில இந்திய பொதுவுடைமை கட்சியின் தொழிற்சங்க பிரிவின் செயலர். தோழர். G.L. தார் அவர்களின் அறிவுறுத்தலின்படி தொழிற்சங்கங்களின் பதிவாளரிடம் பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும்.

2) இந்த அமைப்பின் பொதுச்செயலர்  நிரந்தரமாக சென்னையில் இருப்பதால் அதன் தலைமையகம் சென்னையில் இருப்பது எந்த வகையிலும் தவறான ஒன்று அல்ல. இதைப்போலவே BSNL நிறுவனத்தில் TEPU/PEWA/BSNLDEU/ATM  உள்ளிட்ட பல தொழிற்சங்கங்களின்  தலைமையகம் புது தில்லியில் இல்லை.

3) NFTCL செயல்படுவதற்கு எவரின் ஒப்புதலோ (அ) அனுமதியோ தேவையில்லை; இது தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர்களுக்கான  அகில இந்திய அளவில் உருவான சுயேட்சையான அமைப்பு.   மேலும் இது NFTE-BSNL  போலவே எந்த மத்திய தொழிற்சங்க அமைப்புடனும் இணைக்கப்பட்டது அல்ல.

4) NFTCL எப்பொழுதும் NFTE சங்கத்திற்கு துணையாகவும் நட்புடனும் செயல்படும் அமைப்பாக மட்டுமே இருக்கும்.  இது ஒருபோதும் NFTE க்குள் பிளவையோ  வேறுபாடுகளையோ ஏற்படுத்தாது. NFTE சங்கத்தில் தாங்கள் வகிக்கும் பதவி இதற்கு முன்பு  மூத்த தலைவர்கள் O.P. குப்தா மற்றும் M.B. விச்சாரே போன்றவர்கள் அமர்ந்திருந்த பதவி.  எனவே அப்பதவிக்கென ஒரு பெருமையும் பெருமிதமும் ஊழியரிடையே உள்ளது. அந்த பதவிக்கான மாண்பையும் மரியாதையையும் இனியாவது தாங்கள் கட்டிக்காப்பாற்றிட அன்புடன் வேண்டுகிறேன்.

மேலும் நான் உங்களிடம் ஒரு வேண்டுகோள்  வைக்க விரும்புகின்றேன். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் மார்ச் 2018ல் நடைபெறவிருக்கும் அகில இந்திய மாநாட்டிற்கு பிரதிநிதிகள் / பார்வையாளர்கள் மாநிலவாரியாக எத்தனை பேர்
கலந்துக் கொள்ள  தகுதியுடையவர்கள் என்பதை முன்கூட்டியே நமது சங்க இதழ்களின் மூலம் பகிரங்கமாக அறிவிக்க வேண்டுகிறேன். இந்த மாநாட்டில் கலந்துகொள்ள நாங்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளதால் இரயில் பயணத்திற்கு முன்பதிவு செய்ய இது ஏதுவாக இருக்கும் என்பதால் இந்த வேண்டுகோள்.

நன்றியுடன் தங்களின்தோழமையுள்ள,

C.K. மதிவாணன்
NFTE மாநிலச் செயலர்
 சென்னை தொலைபேசி
15.10.2017


(நன்றி : சென்னை தொலைபேசி வலைதளம்.

Sunday 1 October 2017




I D A  உயர்வு  5.3%

தற்போது பெருவது  =119.0%

உயர்வு             = 5.3%

1.10.2017 முதல்      = 124.3%