Wednesday, 7 September 2016
சிறப்புக் கட்டுரை: ஜியோ வேண்டாம்; பி.எஸ்.என்.எல். போதும்! -அதிகாரி விளக்கம்!

இந்தியாவில் 5 லட்சத்து, 41 ஆயிரத்து, 632 
கிராமங்களில், ஐந்து லட்சம் கிராமங்களில் பி.எஸ்.என்.எல். சேவை உள்ளது. 
தரைவழி போன், வில் போன், கைபேசி பயன்படுத்துபவர்கள் இந்தியாவில் 2.82 
கோடிப்பேர். அதில், 1.62 கோடிப்பேர் பி.எஸ்.என்.எல். சேவையைப் 
பயன்படுத்திவருகிறார்கள்.
இந்த நிலையில்தான் ரிலையன்ஸ் ஜியோ 
விளம்பரத்தால் பிரளயம் உருவாகியுள்ளது. அதுவும் நடிகர், நடிகை, விளையாட்டு 
வீரர்கள் இந்த விளம்பரத்தில் ஈடுபடவில்லை. இந்தியாவின் பிரதமர் 
நரேந்திரமோடி ரிலையன்ஸ் ஜியோபற்றி ஆஹா… ஓகோ… என்று பேசியுள்ளார்.
ரிலையன்ஸ் ஜியோ சேவையைப்பற்றி பி.எஸ்.என்.எல். 
அதிகாரிகள் சங்க அகில இந்திய நிர்வாகி தோழர் பால்கி அவர்களிடம், 
மின்னம்பலம்.காம் இணைய இதழ் அறிமுகத்தோடு விவாதத்தில் இறங்கினோம். தோழர் 
பால்கி மின்னம்பலம்.காம் செய்திகள், கட்டுரைகள், அனைத்தும் சமூக 
சிந்தனையோடு தரமானதாக உள்ளது. மின்னம்பலம் செய்தி தற்போது, கைபேசியில் 
அனைவர் கைகளிலும் தவழ்ந்து வருகிறது. அதற்காக, மின்னம்பலம்.காம் இதழுக்கும்
 ஆசிரியருக்கும் ஆசிரியர் தினமான இன்று (நேற்று) வாழ்த்துகளைத் 
தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு, காங்கிரஸ் ஆட்சியையும் 
ஆளக்கூடிய பாஜக ஆட்சியையும் ஆதாரபூர்வமாக விளாச ஆரம்பித்தார்.
‘பாஜக ஆட்சிக்கு வந்ததும் பிரதமர் நரேந்திர 
மோடி 2014இல் அரசு விழாவில் பேசும்போது, 2016 டெலிகாம் விஷன், அனைத்து 
கிராமங்களுக்கும் தொலைபேசி சேவை இண்டர்நெட் வசதியுடன் சேர்ப்போம். கிராமம்,
 நகரம் என்ற வேறுபாடு இருக்காது. பி.எஸ்.என்.எல். நிர்வாகம், கிராம 
மேம்பாட்டு வளர்ச்சி, மறு நிவாரண முறையில் யூ.எஸ்.ஓ. நிதியில் வழங்கப்படும்
 என்று. பி.எஸ்.என்.எல். நிர்வாகம் இரண்டு வருடத்தில் ஆயிரக்கணக்கான 
கிராமங்களுக்கு தொலைபேசி, கைபேசி, இண்டர்நெட் சேவையை கொண்டுபோய்ச் 
சேர்த்துள்ளது. அதாவது, 5,41,632 கிராமங்களில் 35 ஆயிரம் கிராமங்களுக்கு 
மட்டும்தான் விடுபட்டுப்போயுள்ளது. அந்த கிராம மக்களுக்கும் விரைவில் 
தொலைதொடர்பு சேவை வழங்கப்படும். இதுவரை செய்த செலவுகள் அனைத்தும் 
பி.எஸ்.என்.எல். லாபத்திலிருந்து எடுத்து செலவு செய்யப்பட்டது. பிரதமர் 
சொன்னதுபோல், யூ.எஸ்.ஓ. நிதியிலிருந்து இதுவரை 24% கொடுக்கப்பட்டுள்ளது. 
இன்னும் 76% கொடுக்கப்படவில்லை. இதில், பல லட்சம் கோடி தரவேண்டியுள்ளது 
மத்திய அரசு.
நாம் குறுக்கிட்டு, ‘சார், ஒரு தனியார் நிறுவனம் மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் அதிக சேவை வழங்குவதைப் பாராட்ட வேண்டாமா?’ என்றோம்.
நான் அடித்துச் சொல்கிறேன், தனியார் நிறுவனம் 
வழங்கும் அலைபேசி சேவை மக்களுக்கு ஆபத்தானது, பாதுகாப்பற்றது. ட்ராய் 
விதியை கடைப்பிடிப்பது இல்லை. அதை ஆட்சியாளர்கள் கவனிக்கிறார்களா எனத் 
தெரியவில்லை. வரிசையாகச் சொல்கிறேன், மின்னம்பலம்.காம் டிஜிட்டல் 
மீடியாவில் பதிவு செய்யுங்கள். மக்கள் அதை உணரட்டும்! என்று தொடங்கினார்.
ட்ராய் விதி ஒன்று உள்ளது. தனியார் நிறுவனங்கள்
 கிராமங்களுக்கு சேவை செய்யவில்லை என்றால் அபராதம் செலுத்தவேண்டியுள்ளது. 
அதன்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் தனியார் நிறுவனங்கள் அபராதமாக 16½
 லட்சம் கோடி செலுத்தவேண்டியுள்ளது. சி.ஏ.ஜி. ரிப்போர்ட் தெளிவாகச் 
சொல்கிறது. இதை வசூல் செய்ய, காங்கிரஸ் ஆட்சியும் கண்டுகொள்ளவில்லை. 
இப்போது ஆளக்கூடிய பாஜக ஆட்சியும் முயற்சிக்கவில்லை. என்ன காரணம்? என்ன 
ஊள்நோக்கம்? ஆட்சியில் உள்ளவர்கள் லாபம் அடையத்தானே!
பி.எஸ்.என்.எல். நிர்வாகம் வடகிழக்கு 
மாநிலங்களில் அசாம், உத்தரகாண்ட் உள்ளிட்ட பாதிப்படைந்த மாநிலங்களிலும், 
காஷ்மீர் போன்ற தீவிரவாதம் உள்ள மாநிலங்களிலும், வளர்ச்சி குறைவான பீகார், 
ராஜஸ்தான், ஒரிசா போன்ற மாநிலங்களிலும் லாபம், நஷ்டம் பார்க்காமல் சேவை 
நோக்கத்துடன் பணியாற்றி வருகிறார்கள்.
பி.எஸ்.என்.எல். கைபேசி சேவை பாதுகாப்பானது. 
ட்ராய் விதிப்படி, அளவுப்படி மின்சாரம் பயன்படுத்தி வருகிறோம். (நாம் 
குறுக்கிட்டு, வாசகர்களுக்குப் புரிவதுபோல் சொல்லுங்கள் என்றோம்) நமது 
தலையில் உள்ள மூளை, நரம்புகள் ஏற்கும் வகையில்தான் அதிர்வு அலைகளை சரியாகக்
 கொடுக்க வேண்டும். இல்லையென்றால் மூளை, நரம்புகள் பாதிப்புக்குள்ளாகும் 
என்கிறார்கள் மருத்துவர்கள். டவர்கள் அமைத்து மின்சாரம் மற்றும் அதன் துணை 
பயன்பாட்டு முறைகள்மூலம் அலைசேவை பயன்படுத்தப்படுகிறது. ஒரு டவருக்கான 
எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை மீறிச் செயல்பட்டு வருகின்றன தனியார்
 நிறுவனங்கள்.
உண்மையைச் சொல்கிறேன். உதாரணமாக, ஒரு டவர் 
அமைத்தால் 18 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அலைச் சேவை செய்துவருகிறது 
பி.எஸ்.என்.எல். நிறுவனம். கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் 435 டவர்கள் 
அமைத்து சேவை செய்துவருகிறோம். ஆனால் தனியார் நிறுவனங்கள் அனைவரும் 
மொத்தமாக 65 டவர்கள் வைத்துக்கொண்டு சேவை செய்துவருகிறார்கள். வேலூரில் 
பி.எஸ்.என்.எல்.-லின் 295 டவர்கள் பயன்பாட்டில் உள்ளன. தனியார் 
நிறுவனங்கள், வெறும் 35 டவர் வைத்துக்கொண்டு சேவை செய்துவருகின்றன. அதாவது,
 4 டவர்கள்மூலம் அதிர்வலைகள் அனுப்பவேண்டியதை, ஒரு டவர்மூலமாக அதிக 
மின்சாரத்தைப் பயன்படுத்தி, அதிக அதிர்வலைகளை அனுப்பி பூஸ்ட் 
செய்துவருவதால் பயனாளிகள் நிச்சயம் உடல்ரீதியாக பாதிக்கப்படுவார்கள். 
இதையெல்லாம் கண்காணிக்கும் ட்ராய் அமைதி காத்து வருகிறது. அவர்களுக்கு தடை 
போடப்பட்டுள்ளதாக நினைக்கிறேன்.
கடலூர் பள்ளிநேலியனூரில் பி.எஸ்.என்.எல். ஒரு 
டவர் அமைத்துள்ளது. மக்கள் சேவைக்காக லாப நோக்கம் இல்லாமல். ஆனால் அந்த 
டவருக்கு அதிகமான அழைப்புகள் வருவது இல்லை. ஒரு டவர் அமைக்க ரூ.5½ லட்சம் 
செலவாகும். இதுபோல், இந்தியாவில் பல டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. தனியார் 
நிறுவனங்கள் லாப நோக்கத்துடன் அதிகமாக அழைப்பு வரக்கூடிய இடத்தை சர்வே 
செய்து, டவர் அமைத்து, 18 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு கொடுக்கக்கூடியதை 
36 கிலோமீட்டர் பரப்பளவுக்கு பூஸ்ட் செய்வார்கள். வாடிக்கையாளர்கள் காது 
வலி, கழுத்து வலி, மண்டையில் சூடு பறக்குது என்று கோடாலி தைலத்தைத் 
தேய்ப்பார்கள்.மத்திய அரசு, ட்ராய் நிறுவனத்துக்கு அதிகாரம் கொடுத்து அதிக 
மின்சாரத்தைப் பயன்படுத்தி, அதிகமான அதிர்வலைகளை அனுப்பி, பயனாளிகளின் 
நரம்புகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். உடனடியாக கட்டுப்படுத்த 
வேண்டும்.
ஒரு கொடுமை என்ன தெரியுமா? ரிலையன்ஸ் 
ஜியோவுக்கு சேவைசெய்ய டவர்கள் இல்லை. நஷ்டத்தில் ஓடக்கூடிய டவர்களை 
வாடகைக்குக் கேட்டு வருகிறது. திட்டமிட்டே, கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 
நஷ்டத்தில் ஓடக்கூடிய டவர்களை தனியாருக்கு ஷேர் செய்யலாம் என்ற சட்டமும் 
போட்டது. அப்போதே, பி.எஸ்.என்.எல். டவர்கள் பல ரிலையன்ஸ்க்கு வாடகைக்குப் 
போகலாம்.
ஆடம்பர விளம்பரத்தைப் பார்த்து மக்கள் ஏமாற 
வேண்டாம். ரிலையன்ஸ் நாள் ஒன்றுக்கு 19 ரூபாய்க்கு 100 எம்.பி. இலவசமாக 
வழங்குகிறது. பி.எஸ்.என்.எல். 17 ரூபாய்க்கு 110 எம்.பி. இலவசமாக 
வழங்குகிறது.
ரிலையன்ஸ் மாதத்துக்கு 999 ரூபாய் கட்டணத்தில் 
10 ஜி.பி. வழங்குகிறது. பி.எஸ்.என்.எல். 549 ரூபாய் கட்டணத்துக்கு 10 
ஜி.பி. வழங்குகிறது. அதிகபட்சமாக மூன்று மாதத்துக்கு 4999 ரூபாய் 
கட்டணத்துக்கு 75 ஜி.பி. வழங்குகிறது ரிலையன்ஸ். பி.எஸ்.என்.எல். மூன்று 
மாதத்துக்கு 3297 ரூபாய் கட்டணத்தில் அன் லிமிடெட் டேட்டா வழங்குகிறது. எது
 பெஸ்ட்? இதையெல்லாம் நம்ம நாட்டு மந்திரிங்க சொல்லமாட்டாங்க’ என்றார் 
தோழர் பால்கி.
சைனா பொருள்களை வாங்கக்கூடாது. சைனாவிலிருந்து 
சாக்லெட், தேசியக் கொடி, பட்டாசு, டீ கப் இறக்குமதியாவதைத் தடுப்பதாகவும், 
வாங்கவேண்டாம் என்று சொல்லக்கூடிய அரசு, இந்தியாவில் தொலைதொடர்பு சேவைக்கு 
இன்சுலேஷன் மேலை நாடுகளிலிருந்துதான் செய்து பல்லாயிரம் கோடிகளை எடுத்துப் 
போகிறார்கள். ஏன் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கும் சைனாதான் இன்சுலேஷன் 
செய்கிறது என்பது உண்மை’ என்றும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
தகவல்: காஞ்சி NFTE 
 
No comments:
Post a Comment