கம்யூனிஸ்ட்களின் கோட்டையான  நாகப்பட்டினம் தொகுதியில், 
பொதுச் செயலர் தோழர் சுதாகர் ரெட்டி அவர்களின் எழுச்சிமிக்க உரையை தோழர் மதிவாணன் தமிழாக்கம் செய்கின்ற காட்சி !  
 Photo : Janasakthi
                                                            Photo : Janasakthi
 
 
பெரியார், அண்ணாவின் பாதையை மறந்து, அதற்கு 
எதிராக இன்றைய திராவிடக் கட்சிகளின் தலைவர்கள் செயல்படுகின்றனர் என்றார் 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலர் சுதாகர் ரெட்டி.
நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி இந்திய 
கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கோ.பழனிச்சாமிக்கு வாக்கு கேட்டு திருவாரூர் 
தெற்கு வீதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் 
பேசியது:
“கடந்த 10 ஆண்டுகளாக பிரதமராக உள்ள 
மன்மோகன்சிங் ஆட்சியில் பெரும் ஊழல்கள். அவரது கட்டுப்பாட்டில் இருந்த 
நிலக்கரி துறையில் ரூ.1.86 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு 
எழுந்துள்ளது. தாராளமயம் என்ற பெயரில் நாட்டை காங்கிரஸ் பெரும் பள்ளத்தில் 
தள்ளிவிட்டுள்ளது. நாட்டைக் காப்பாற்ற புறப்பட்டவர்கள் நாங்கள்தான் எனக் 
கூறும் பாஜகவும் அதே வழியில் சென்ற கட்சிதான். இரு கட்சிகளாலும் நாட்டு 
மக்கள் வறுமை, வேலையின்மை போன்ற துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
காங்கிரஸின் பலவீனத்தை பயன்படுத்தி 
ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று பாஜக கணக்குப் போடுகிறது. நரேந்திர மோடி 
என்ற தனி நபரை முன்னிறுத்தி தேர்தலைச் சந்திக்கிறது. நாட்டின் ஜனநாயக 
முறைக்கு இது மிகவும் ஆபத்தானது. சில திராவிடக் கட்சிகளை சேர்த்துக்கொண்டு 
தேர்தலைச் சந்திக்கும் பாஜகவின் திட்டம் தமிழகத்தில் எடுபடாது.
திராவிட இயக்கத்தின் முன்னோடிகளான பெரியார்,
 அண்ணா ஆகியோர் நல்லவர்கள், எளிமையானவர்கள். ஆனால், அதற்கு நேர்மாறாக 
இப்போதைய திராவிட இயக்கத் தலைவர்கள் உள்ளனர்.
மதவாத, ஊழல் கட்சிகளின் பின்னால் இந்திய 
பெரு முதலா ளிகள், பன்னாட்டு முதலாளிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளன. 
குறிப்பாக, நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி நாட்டை 
சூறையாட நினைக்கும் முதலாளிகள், அவருக் காக பிரச்சாரம் செய்கின்றனர். 
பாஜகவின் தேர்தல் பிரச்சார செலவு ரூ.10 ஆயிரம் கோடி. இவற்றை 
எதிர்த்துத்தான் தமிழகத்தில் 18 தொகுதிகளில் வேட்பாளர்களை களம் 
இறக்கியுள்ளோம்” என்றார் சுதாகர் ரெட்டி.
கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன், 
நிர்வாகக் குழு உறுப்பினர் சி.கே.மதிவாணன், மாவட்டச் செயலர் வெ.வீரசேனன், 
எம்எல்ஏ உலகநாதன் உள்ளிட்டோர் பேசினார்.